குமரியில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம் பாதுகாப்பு பணிக்கு 1000 போலீசார் நியமனம்


குமரியில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம் பாதுகாப்பு பணிக்கு 1000 போலீசார் நியமனம்
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 8:49 PM GMT)

குமரியில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாதுகாப்பு பணிக்கு 1000 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில்,

நமது நாட்டின் 73-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் நாளை (வியாழக்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. குமரி மாவட்டத்திலும் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின கொடியேற்று விழா நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.05 மணிக்கு நடக்கிறது. இதில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தும், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தின விழாவையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை கடந்த சில நாட்களாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்திலும், ஆயுதப்படை முகாம் மைதானத்திலும் நடந்து வருகிறது. சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேற இருக்கிறது. இதில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி, மணலிக்கரை கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பருத்திவிளை சாந்திநிலையம், நாகர்கோவில் பிஷப் ரெமிஜியுஸ் பள்ளி, மயிலாடி எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணன்கோவில் எஸ்.என்.எம்.இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளின் மாணவ- மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.

விழாவில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் கலைநிகழ்ச்சி ஒத்திகை நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதனை மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பாதுகாப்பு

சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெற உள்ள நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம், இன்று (புதன்கிழமை) பிற்பகலில் இருந்து போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட இருக்கிறது. மேலும் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்கள், சுற்றுலாத்தலங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், முக்கியமான சந்திப்புகள், கடைவீதிகள் போன்றவற்றில் போலீசார் பாதுகாப்புடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

1000 போலீசார் நியமனம்

கடலோர பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தீவிர ரோந்து பணியில் கடலோர பாதுகாப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடைமைகள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. இதற்காக மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டுள்ளது.

லக்கேஜ்களை சோதனை செய்ய ஸ்கேனர் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், ரெயில்வே போலீசாரும் இணைந்து ரோந்து பணியை மேற்கொள்ள இருக்கிறார்கள். மொத்தத்தில் குமரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொடி- தோரணங்கள்

சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி வண்ணத்தினாலான துணி கொடிகள், பிளாஸ்டிக் கொடிகள், தோரணங்கள், துணி பேட்ஜ்கள், மெட்டல் பேட்ஜ்கள், சுதந்திர தின வாழ்த்துக்களுடன் கூடிய வாழ்த்து அட்டைகள் போன்றவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளன. இதனால் கொடி, தோரணங்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவை நாகர்கோவில் கடைவீதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு ஏராளமாக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

சிறுவர்களும், பெரியோர்களும் தங்களுக்கு தேவையான கொடி, தோரணங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்வதை காண முடிந்தது. பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார்துறை அலுவலகங்களிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட இருப்பதால் அவர்களும் சுதந்திர தின விழா ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story