ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது


ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2019 10:00 PM GMT (Updated: 13 Aug 2019 8:53 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜோலார்பேட்டை,

ஈரோட்டில் இருந்து புறப்பட்ட ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு ஜோலார்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது முன்பதிவு பெட்டியின் (எஸ்-6) கழிவறைக்குச் செல்லும் வழியில் 2 வாலிபர்கள் தகராறில் ஈடுபடுவதாகப் பயணிகள், டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தனர். அந்த வாலிபர்கள் பொதுப்பிரிவு பெட்டியில் டிக்கெட் எடுத்து, முன்பதிவு பெட்டியில் ஏறி பயணம் செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர், ஓடும் ரெயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு 15-வது பட்டாலியனை சேர்ந்த போலீஸ்காரர் பெருமாளிடம் கூறினார். அவர், அங்குச் சென்று வாலிபர்களை பொதுப்பிரிவு பெட்டிக்குச் செல்லும்படி கூறினார். ஆனால், அதனை ஏற்க மறுத்த வாலிபர்கள் திடீரெனப் போலீஸ்காரர் பெருமாளை சரமாரியாகத் தாக்கினர். இதைப் பார்த்த பயணிகள், வாலிபர்களை தடுத்தனர்.

இதுகுறித்து போலீஸ்காரர் பெருமாள், காட்பாடி ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்த ரெயில் காட்பாடிக்கு வந்து நடைமேடையில் நின்றதும், சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட ரெயில் பெட்டிக்குச் சென்று அந்த வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இருவரும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் அசோக்குமார் (வயது 31), திருச்சியைச் சேர்ந்த அறிவழகன் (31) எனத் தெரிய வந் தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story