ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு; நடுக்கடலில் இலங்கை கடற்படை நடவடிக்கை


ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு; நடுக்கடலில் இலங்கை கடற்படை நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 8:57 PM GMT)

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 517 விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக குட்டி கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

ராமேசுவரம் மீனவர்களை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி இலங்கை கடற்படையினர் எச்சரித்தனர். அதனை தொடர்ந்து மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப முயன்றனர். ஆனால் அதற்குள் ஒரு சில படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அந்த படகுகளுக்குள் இறங்கி மீனவர்களை தாக்கியதுடன் அதில் இருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ராமேசுவரம் தங்கச்சிமடம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கிசிங்கர் என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த மீனவர்கள் கிசிங்கர், இன்னாசி, மரியமில்லர், மரிய இதியோன், சிம்சோன், ஜார்ஜ், மெல்சன் ஆகிய 7 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் அனைவரையும் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

நடுக்கடலில் 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த நடவடிக்கையானது, அந்த பகுதி மீனவர்களை கவலை அடையச் செய்துள்ளது. 7 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Next Story