18 நாட்களாக மந்திரிகள் இல்லை: எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்; கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்


18 நாட்களாக மந்திரிகள் இல்லை: எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்; கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 9:05 PM GMT)

18 நாட்களாக மந்திரிகள் இல்லாததால் எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்‘ செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. உக்ரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடும் மழை வெள்ளம் காரணமாக வட கர்நாடகம், தென்கர்நாடகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டிய மாநில அரசு, கும்பகர்ணனை போல் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளது.

இத்தகைய மோசமான சூழ்நிலையை நிர்வகிக்க மாநிலத்தில் மந்திரிகள் இல்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-மந்திரி எடியூரப்பா ஒருவர் மட்டுமே ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனால் எந்த பயனும் இல்லை. மந்திரிகள் இல்லாமல் இத்தகைய பேரிடரை சமாளிக்க முடியாது. கர்நாடகத்தில் மாநில அரசே இல்லை என்ற சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் உரிய நிவாரணம் கிடைக்காமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோர் கர்நாடகம் வந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு சென்றனர். இதுவரை மத்திய அரசு நிதி உதவியை அறிவிக்கவில்லை. கர்நாடகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதி உதவி இன்னும் கிடைக்கவில்லை.

கர்நாடகத்தின் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், பிரதமர் மோடி உடனே இங்கு வந்து வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இதை தேசிய பேரிடராக அறிவித்து உடனடியாக ரூ.5,000 கோடி நிதி உதவி வழங்க வேண்டும். முதல்-மந்திரி எடியூரப்பா உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.

எடியூரப்பா பதவி ஏற்று 18 நாட்கள் ஆகிறது. இன்னும் மந்திரிகள் பதவி ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் கவர்னர் அமைதியாக இருப்பது ஏன்?. அரசியல் சாசனப்படி மாநிலத்தில் அரசு இருக்கிறதா? என்பதை கவர்னரிடம் கேட்க விரும்புகிறேன். கவர்னர் தாமாக முன்வந்து செயல்பட்டு, இந்த அரசை ‘டிஸ்மிஸ்‘ செய்ய வேண்டும். ஒரு முதல்-மந்திரியை மந்திரிசபை என்று அழைக்க முடியாது.

இன்னும் சில நாட்கள் நாங்கள் பொறுமையாக இருப்போம். மந்திரிசபையை அமைக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். மழை வெள்ளத்தால் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு உக்ரப்பா கூறினார். 

Next Story