ராமநாதபுரத்தில் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரத்தில் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2019 10:30 PM GMT (Updated: 13 Aug 2019 10:06 PM GMT)

துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகராட்சியில் 80 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணிபுரிவதால் பணி பளு அதிகமாக இருப்பதாகவும் உடனடியாக போதுமான அளவு துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 10-ந் தேதிக்கு மேல் சம்பளம் வழங்கப்படுவதால் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல் தேதியே சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்கள் நியமனம் செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ. 14 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ள நிலையில் ராமநாதபுரம் நகராட்சியில் ரூ.6 ஆயிரம் மட்டும் தான் வழங்கப்படுகிறது. எனவே முறையான சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் 1992-ம் ஆண்டிலிருந்து துப்புரவு தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதி தொகைக்கு எந்தவித கணக்கு வழக்கும் தரப்படுவதில்லை என்றும் அதற்கு வழங்கப்படுகிற வட்டி வழங்கப்படவில்லை என்றும் இந்த வைப்பு நிதியில் பெரும் மோசடி நடைபெற்றிருப்பதால் அந்த கணக்கு வழக்குகளை சரிபார்த்து துப்புரவு தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி பணியாளர்கள் கிளை சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்க கிளை தலைவர் பாலு தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

தேசிய குழு உறுப்பினர் மீனாள் சேதுராமன் ஏ.ஐ.டி.யூ.சி. கொடியை ஏற்றி வைத்து துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.

Next Story