சின்ன வீராம்பட்டினத்தில் ரோந்து சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்; தீயணைப்பு படை வீரருக்கு வலைவீச்சு


சின்ன வீராம்பட்டினத்தில் ரோந்து சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்; தீயணைப்பு படை வீரருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 10:44 PM GMT)

சின்ன வீராம்பட்டினம் பகுதியில் ரோந்து சென்ற போலீஸ்காரரை தாக்கிய தீயணைக்கும் படை வீரரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியாங்குப்பம்,

பாகூர் அருகே உள்ள பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் உதயக்குமார். இவர் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் ஊர்க்காவல் படை வீரர் ஆனந்தராஜுடன் சேர்ந்து சின்ன வீராம்பட்டினம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது சாலை ஓரத்தில் கண்ணாடி உடைந்த நிலையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அதனை கவனித்த உதயக்குமார் கார் டிரைவரிடம் விசாரித்தார். அப்போது மதுகுடித்த போதையில் ஒரு கும்பல் வந்து கார் மீது கல்வீசிவிட்டு ஓடிவிட்டது என்று டிரைவர் கூறினார்.

உடனே அவர் அந்த கும்பல் தப்பி ஓடியதாக கூறப்படும் பகுதிக்கு சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த சிலரிடம் அது தொடர்பாக விசாரித்தார். அப்போது அந்த கும்பலில் இருந்த சின்ன வீராம்பட்டினத்தை சேர்ந்த தினேஷ் ஆத்திரமடைந்து போலீஸ்காரரை தாக்கி அவர் சட்டையை கிழித்ததாக கூறப்படுகிறது.

அதுகுறித்து உதயக்குமார், அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமனிடம் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் போலீஸ்காரரை தாக்கியதாக கூறப்படும் தினேஷ் தமிழக தீயணைப்பு படையில் தீயணைப்பு வீரராக வேலை செய்து வருவது தெரிய வந்தது. விசாரணையைத் தொடர்ந்து தினேசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story