சேலத்தில் பலத்த மழை, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது


சேலத்தில் பலத்த மழை, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 11:03 PM GMT)

சேலத்தில் பெய்த பலத்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம்,

தென்மேற்கு பருவ காற்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தீவிரம் அடைந்து உள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது. இந்த நிலையில் சேலத்தில் கடந்த 2 நாட்களாக வெயில் அடித்தது. இதையொட்டி நேற்றும் பகலில் வெயில் சுட்டெரித்தது.

பின்னர் மாலை 4 மணி அளவில் குளிர் காற்று வீசத்தொடங்கியது. தொடர்ந்து லேசான மழை பெய்தது. பின்னர் மாலை 4.30 மணி முதல் 5.30 வரை 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சேலம் 4 ரோடு, ராமகிருஷ்ணா ரோடு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், குகை உள்ளிட்ட சேலம் மாநகர் பகுதியில் உள்ள பல சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் 4 ரோடு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இருபுறமும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. உள்ளது. அதில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும் அந்த பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

இதே போன்று சங்கர் நகர் ஹரே கிருஷ்ணா சாலை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து சென்றது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதே போன்று பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலத்தில் திடீரென்று பெய்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story