பெருந்துறை அருகே விபத்து: மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வியாபாரி பலி, மனைவி படுகாயம்


பெருந்துறை அருகே விபத்து: மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வியாபாரி பலி, மனைவி படுகாயம்
x
தினத்தந்தி 14 Aug 2019 10:15 PM GMT (Updated: 14 Aug 2019 5:20 PM GMT)

பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் வியாபாரி ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.

பெருந்துறை,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஆனங்கூர் காளியண்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (வயது 33). இவர் பனியன் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி சரஸ்வதி (25). இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளான்.

நேற்று முன்தினம் ஜீவரத்தினமும், சரஸ்வதியும் பெருந்துறை அருகே சீனாபுரத்தில் உள்ள சரஸ்வதியின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் காளியண்ணன் நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். பெருந்துறை அருகே வாவிக்கடை பகுதியில் மோட்டார்சைக்கிள் சென்றபோது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியது.

இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்த ஜீவரத்தினம் மற்றும் சரஸ்வதி ஆகியோர் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ஜீவரத்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். சரஸ்வதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story