கிராம மக்களிடம் நிதி திரட்டி இடிந்த வாய்க்கால் பாலத்தை இளைஞர்கள் சீரமைத்தனர்


கிராம மக்களிடம் நிதி திரட்டி இடிந்த வாய்க்கால் பாலத்தை இளைஞர்கள் சீரமைத்தனர்
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 7:14 PM GMT)

பூதலூர் அருகே இடிந்த வாய்க்கால் பாலத்தை, கிராம மக்களிடம் நிதி திரட்டி இளைஞர்கள் சீரமைத்தனர்.

திருக்காட்டுப்பள்ளி,

பூதலூர் அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் தெற்கு மற்றும் வடக்கு சிவன்கோவில் தெருக்களை இணைக்கும் வகையில் ஆனந்தகாவிரி வாய்க்காலில் கடந்த 2002-ம் ஆண்டு சிறிய நடை பாலம் பொதுமக்களின் சொந்த முயற்சியால் கட்டப்பட்டது. இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என அரசிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பாலம் சீரமைக்கப்படவில்லை. இந்தநிலையில் ஆனந்த காவிரி நடைபாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. தற்போது வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் பாலம் இடிந்ததை பொருட்படுத்தாமல் வாய்காலில் இறங்கி சென்று வந்தனர். பாலம் இடிந்து விழுந்தது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாராட்டு

எனவே சமூக ஆர்வலர் ஒருவர் தன்னுடன் சில இளைஞர்களை சேர்த்துக்கொண்டு பாலத்தின் இடிந்த பகுதியை மட்டும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்தார். இதற்கான முயற்சியை தொடங்கிய அவர்கள் கிராம மக்களை அணுகி நிதி திரட்டி சிமெண்டு, கம்பி, மணல், ஜல்லி ஆகிய பொருட்களை சேகரித்தனர். பின்னர் கிராம இளைஞர்களை ஒருங்கிணைத்து நேற்று பகலில் இடிந்த பாலத்தின் ஒரு பகுதியில் கான்கிரீட் போட்டு சீரமைத்தனர். கல்லணையில் தண்ணீர் திறப்பதற்குள் கான்கிரீட் இறுகி போக்குவரத்துக்கு தயாராகிவிடும் என அவர்கள் தெரிவித்தனர். இடிந்த வாய்க்கால் பாலத்தை கிராம மக்களிடம் நிதி திரட்டி சீரமைத்த இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story