திருவள்ளூர் அருகே 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி


திருவள்ளூர் அருகே 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 14 Aug 2019 11:15 PM GMT (Updated: 14 Aug 2019 9:43 PM GMT)

திருவள்ளூர் அருகே 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் ஆந்திரா வங்கி உள்ளது. இந்த வங்கியுடன் இணைந்து ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை அந்த ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது அங்கு இருந்த ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் உடனடியாக அவர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது. அந்த ஏ.டி.எம் மையத்தில் காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல திருவள்ளூரை அடுத்த ராமாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சிண்டிகேட் வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம். மையம் உள்ளது. அதன் சற்று தொலைவில் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த 2 ஏ.டி.எம். எந்திரங்களையும் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். ஏ.டி.எம். எந்திரங்களை உடைக்க முடியாததால் பணம் தப்பியது. இங்கும் காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது அதில் முகமூடி அணிந்திருந்த கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story