16 வயது சிறுவனை கடத்தி பாலியல் உறவு வைத்த பெண் கைது
மும்பையில் 16 வயது சிறுவனை கடத்தி பாலியல் உறவு வைத்த பெண் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை நேரு நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி காலை உணவு சாப்பிட ஓட்டலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றான். அன்று மாலை வரை அவன் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நேரு நகர் போலீசில் மகன் காணாமல் போனது பற்றி புகார் அளித்தனர்.
அதேநாளில் 4 குழந்தைகளுக்கு தாயான 38 வயது பெண் ஒருவரும் மாயமானார். இதுபற்றி அவரது கணவரும் அதே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டு போலீசார் விசாரிக்க தொடங்கினர். அப்போது அந்த பெண்ணுக்கும், சிறுவனுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக துப்பு துலக்கினர்.
அப்போது மும்பை குர்லா ரெயில்வே தண்டவாளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுவனுடன் அந்த பெண் வசித்து வருவது தெரியவந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த 16 வயது சிறுவனை மீட்டனர்.
இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சம்பவத்தன்று சிறுவனை அப்பெண் பாந்திரா ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இருவரது செல்போன்களின் சிம்கார்டுகளை நொறுக்கி போட்டார்.
பின்னர் சிறுவனை டெல்லிக்கு கடத்தி சென்றார். அங்கு வாடகை வீடு எடுத்து தங்குவதற்காக சிறுவனுடன் அலைந்து திரிந்துள்ளார். ஆனால் வாடகை வீடு கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுவனை அழைத்துக்கொண்டு குஜராத் சென்றார். அங்கு வதோதரா மற்றும் நவ்சாரி நகரங்களில் கடந்த 11-ந் தேதி வரை சிறுவனுடன் தங்கியிருந்து உள்ளார். பின்னர் மும்பை திரும்பி குர்லாவில் சிறுவனுடன் வசித்து வந்தபோது தான் போலீஸ் பொறியில் அப்பெண் மாட்டிக்கொண்டார்.
தன்னை அந்த பெண் கடத்தி சென்று கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்ததாக சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான். இதையடுத்து கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையான ‘போக்சோ’ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மீட்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் சிறுவனை கடத்தி கட்டாய பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story