ஓசூரில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - வாலிபர் கைது


ஓசூரில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2019 10:15 PM GMT (Updated: 14 Aug 2019 9:55 PM GMT)

ஓசூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் 2-வது சிப்காட் அருகில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்குள் நேற்று காலையில் வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். பின்னர் அவர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தார்.

இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சம்பந்தப்பட்ட அந்த வங்கி அதிகாரிகளின் செல்போன் எண்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல் சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இது தொடர்பாக இது குறித்து ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்த உடன் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் அடுத்த கத்தள்ளி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 22) என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் போது வங்கி அதிகாரிகளுக்கு குறுந்தகவல் சென்றதால் அதில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பணம் தப்பியது. ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து வாலிபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story