ராசிபுரத்தில், தோட்டக்கலைத்துறை ஊழியரின் மனைவியிடம் தாலி சங்கிலி பறிப்பு


ராசிபுரத்தில், தோட்டக்கலைத்துறை ஊழியரின் மனைவியிடம் தாலி சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2019 10:30 PM GMT (Updated: 14 Aug 2019 10:28 PM GMT)

ராசிபுரத்தில் தோட்டக் கலைத்துறை ஊழியரின் மனைவியிடம் தாலி சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ராசிபுரம்,

ராசிபுரம் டவுன் அமைச்சர் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவர் தனியார் பள்ளிகளில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் சங்கீதா (வயது 35), என்ஜினீயர். இவருடைய கணவர் சக்கரவர்த்தி, சேலம் மாவட்டம் கொளத்தூரில் தோட்டக் கலைத்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

சக்கரவர்த்தி-சங்கீதா தம்பதியினருக்கு சர்வேஷ் (5) மற்றும் 8 மாத ஆண்குழந்தை உள்ளனர். கணவர் சக்கரவர்த்தி வெளியூரில் இருப்பதால் ராசிபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் சங்கீதா தற்போது இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் சங்கீதா அவரது வீட்டின் வாசலில் தண்ணீர் தெளிக்க முற்பட்டுள்ளார். அந்த நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சங்கீதாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பித்து சென்றனர்.

இதை சற்றும் எதிர்பாராத சங்கீதாவும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். சங்கீதாவின் கழுத்தில் இருந்து நகையை பறித்துச்சென்ற பகுதியில் உள்ள வீடுகளில் பெண்கள் வாசலை கூட்டிக்கொண்டு இருந்துள்ளனர். சங்கீதாவும் மற்ற பெண்களும் சத்தம் போட்டும், ஆண்களின் நடமாட்டம் அந்த நேரத்தில் இல்லாததால் நகையை பறித்த மர்ம நபர்கள் அவர்களின் மோட்டார் சைக்கிளில் எளிதாக தப்பித்து சென்றனர். அவர்கள் ‘ஹெல்மெட்’ அணியவில்லை என்று கூறப்படுகிறது.

சங்கீதா வசித்து வந்த தெருவில் கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) பொருத்தப்படவில்லை. ஆனால் மேட்டுத்தெரு பகுதியிலும், சிவன் கோவில் அருகில் உள்ள ஒருவரது வீட்டின் அருகிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கேமராவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பற்றிய விவரம் தெரிகிறதா? என்பதை பற்றி ராசிபுரம் போலீசார் ஆய்வு செய்தனர்.

சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதிகாலை நேரத்தில் தோட்டக்கலைத்துறை ஊழியரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சங்கீதா, ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story