ராசிபுரத்தில் பரபரப்பு, செல்போன் கோபுரத்தில் ஏறி ஆட்டோ டிரைவர் போராட்டம் - தீயணைப்பு படையினர் மீட்டனர்


ராசிபுரத்தில் பரபரப்பு, செல்போன் கோபுரத்தில் ஏறி ஆட்டோ டிரைவர் போராட்டம் - தீயணைப்பு படையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 11:06 PM GMT)

ராசிபுரத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி ஆட்டோ டிரைவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம், 

ராசிபுரம் டவுன் வி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ரகுநாத் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவரது மோட்டார் சைக்கிள் சேலத்தில் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. மேலும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் மது அருந்திவிட்டு ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள 120 அடி உயரம் உள்ள செல்போன் கோபுரத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஏறி அதன் உச்சியில் அமர்ந்துகொண்டார்.

இதையறிந்த நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். அங்கே திரண்டிருந்த பொதுமக்கள் கீழே இறங்கி வரச்சொல்லியும் 2 மணி நேரத்திற்கு மேலாக ரகுநாத் கீழே இறங்கி வரவில்லை. சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீசார் சென்றனர்.

ராசிபுரம் தீயணைப்பு படையினர் நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்போன் கோபுரத்தில் ஏறி அந்த வாலிபரிடம் பேசினர். பிறகு தீயணைப்பு படையினர் அந்த வாலிபரை பத்திரமாக மீட்டனர். கோபுரத்தில் இருந்து கீழே இறங்கிய ரகுநாத்தை அவரது உறவினர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர். 2 மணி நேரமாக நடந்த இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story