புதுவை உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு நிதி; மத்திய நிதிக்குழு தலைவருக்கு, முன்னாள் எம்.பி. ராமதாஸ் கடிதம்


புதுவை உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு நிதி; மத்திய நிதிக்குழு தலைவருக்கு, முன்னாள் எம்.பி. ராமதாஸ் கடிதம்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:30 PM GMT (Updated: 14 Aug 2019 11:26 PM GMT)

புதுவை உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு நிதி வழங்கவேண்டும் என்று மத்திய நிதிக்குழு தலைவருக்கு முன்னாள் எம்.பி. ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் 15-வது நிதிக்குழுவின் தலைவர் என்.கே.சிங்-க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் ஆண்ட காலத்திலிருந்தே உள்ளாட்சி அமைப்புகள் பெருமைமிகு அங்கங்களாக இருந்தன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 116 நகர வார்டுகளை உள்ளடக்கிய 5 நகராட்சிகளும், 108 கிராம பஞ்சாயத்துகளையும், 812 கிராம வார்டுகளையும் உள்ளடக்கிய 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 1,144 மக்களால் தேர்ந்தெடுக்க கூடிய பிரதிநிதிகள் செயல்பட வேண்டும்.

இந்த அமைப்புகளுக்கு ஒருமுறை நடக்க வேண்டிய தேர்தல்கள் முறையாக நடத்தப்படாமல் இருந்தபோதும், இந்த அமைப்புகள் தங்களிடம் உள்ள பணியாளர்களை கொண்டு குறைந்த பணிகளை ஆற்றி வருகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் புதுவையில் பல்வேறு காரணங்களால் மெல்ல மெல்ல நலிவடைந்து வருகின்றன. தங்களது நிதியுதவிக்காக மாநில அரசை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசோ நிதிச்சிக்கலில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசு அளிக்கும் வருவாய் பற்றாக்குறையும், திட்ட நிதி பற்றாக்குறையும் சேர்ந்து புதுச்சேரி அரசை முழுவதுமாக செயலிழக்க செய்து வெளிச்சந்தையில் கடன் வாங்க வைத்து புதுச்சேரி ஒரு கடனாளியாக மாறி வருகிறது. மத்திய பஞ்சாயத்து அமைச்சகமும், நகர்ப்புற அமைச்சகமும் பல்வேறு காரணங்களுக்காக புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்க முடியவில்லை. எல்லா பக்கமும் ஆதரவை இழந்து நிற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவக்கூடிய ஒரே நிறுவனமாக 15-வது நிதிக்குழுதான் உள்ளது. எனவே பிரச்சினையின் உண்மை தன்மையை உணர்ந்து புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் ஒரு சிறப்பு நிதியை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Next Story