இந்தியாவில் பல்வேறு மரபுகளை கொண்ட மக்கள் வாழ்கின்றனர்: ஒரே மொழி, ஒரே கலாசாரத்தை உருவாக்க நினைப்பது இயற்கைக்கு முரணானது


இந்தியாவில் பல்வேறு மரபுகளை கொண்ட மக்கள் வாழ்கின்றனர்: ஒரே மொழி, ஒரே கலாசாரத்தை உருவாக்க நினைப்பது இயற்கைக்கு முரணானது
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 7:15 PM GMT)

பல்வேறு மரபுகளை கொண்ட மக்கள் வாழும் இந்தியாவில் ஒரே மொழி, ஒரே கலாசாரத்தை உருவாக்க நினைப்பது இயற்கைக்கு முரணானது என தஞ்சையில் காதர்மொகிதீன் கூறினார்.

தஞ்சாவூர்,

இந்தியாவில் வாழும் எல்லா சமுதாய மக்களும் இந்தியர்கள் என்ற எண்ணத்தில் வாழக்கூடியவர்கள். உலகில் மிக சிறந்த நாடு இந்தியா. இந்திய மக்களாக இருப்பதில் மிகுந்த பெருமையும், பெருமிதமும் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். தேசிய கொடியில் எப்படி மூவர்ணங்கள் இருக்கிறதோ அதேபோல இந்திய மக்களும் பல்வேறு கருத்து, பல்வேறு கொள்கை, கலாசாரம், மரபுகளை எல்லாம் கொண்டு இருக்கிறார்கள். எல்லா மக்களையும் ஒரே மரபு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்று உருவாக்க நினைப்பது இயற்கைக்கு முரணான ஒன்று. கலாசாரம், மதம், கொள்கையில் நாம் வேறுபாடு கொண்டிருந்தாலும் நாம் அனைவரும் இந்திய தாய் மக்கள் என்ற உணர்வோடு வாழ்ந்து வருகிறோம். அந்த உணர்வை மேலும் ஓங்க செய்வது தான் எல்லா அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும்.

அவசியம் என்ன?

காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்ட ஒரு பகுதி. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே காஷ்மீரில் அதிக முஸ்லிம்கள் வசிக்கின்றனர். காஷ்மீருக்கென சில கலாசாரம் இருக்கிறது. நாகலாந்து, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, இமாசலபிரதேசம் என இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் அந்தந்த மாநிலத்தில் உள்ள சிறப்பு நிலையை கருதி, சிறப்பு அந்தஸ்தை அரசியல் சட்டம் வழங்கி இருக்கிறது. அதேபோல் காஷ்மீருக்கும் வழங்கப்பட்டது. எல்லா மாநிலங்களிலும் உள்ள சிறப்பு அந்தஸ்தை அப்படியே வைத்துவிட்டு காஷ்மீருக்கு இருந்த அந்தஸ்தை மட்டும் நீக்க வேண்டிய அவசியம் என்ன?.

சிறப்பு அந்தஸ்தை நீக்கி இருப்பது இந்தியாவோடு தங்களை இணைந்து கொண்ட காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. அந்த மக்களை மத்தியஅரசு அவமானப்படுத்தி இருக்கிறது. காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை தள்ளி போட வேண்டும் என தமிழகத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் உள்ள கட்சி தலைவர்களை கொண்ட ஒரு தூதுக்குழுவை காஷ்மீருக்கு அனுப்ப வேண்டும்.

எங்களது முடிவு

தூதுக்குழு சுதந்திரமாக மக்களை சந்திக்க மத்தியஅரசு அனுமதிக்க வேண்டும். அதன்பிறகு தான் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். தி.மு.க. கூட்டணி கட்சிகள் எடுத்த முடிவு எங்களது முடிவு. இது தான் பிற மாநிலங்களில் உள்ள கட்சிகளின் முடிவாக மாறி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story