சிவகங்கையில் சுதந்திர தினவிழா, 188 பேருக்கு ரூ.2¼ கோடி நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்


சிவகங்கையில் சுதந்திர தினவிழா, 188 பேருக்கு ரூ.2¼ கோடி நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:45 PM GMT (Updated: 15 Aug 2019 7:32 PM GMT)

சிவகங்கையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசிய கொடி ஏற்றி வைத்த கலெக்டர் ஜெயகாந்தன், 188 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக மைதானத்தில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு வந்த கலெக்டரை போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் வரவேற்று அழைத்து வந்தார். அதன் பின்னர் 9.50 மணிக்கு கலெக்டர் ஜெயகாந்தன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

அதைத் தொடர்ந்து கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் ஆகியோர் வெள்ளை புறா மற்றும் தேசிய கொடி நிறத்துடன் கூடிய பலூன்களை பறக்க விட்டனர். பின்னர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் ஆயுதப்படை போலீசார், பெண் போலீசார், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். மாணவ-மாணவிகள் அணிவகுத்து வந்து மரியாதை செய்தனர். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அவர்கள் இருந்த இடத்திற்கே சென்று கலெக்டர் ஜெயகாந்தன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

பல்வேறு அரசு துறைகளின் சார்பில் மொத்தம் 188 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 30 லட்சத்து 6 ஆயிரத்து 669 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார். விழாவில் போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், அந்தோணி செல்லத்துரை, நீலாதேவி, சுந்தரி, மலையரசி, விஜயா, மணி, சீமான் மற்றும் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 8 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 65 பேருக்கும், வருவாய்த்துறை மற்றும் பிற துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 225 பணியாளர்களுக்கும் சான்றிதழ்களை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், முரளிதரன், துணை இயக்குனர்(சுகாதார பணிகள்) யசோதாமணி, இணை இயக்குனர்(மருத்துவம்) இளங்கோ, மகேஸ்வரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் இளங்கோவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமபிரதீபன், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) ராஜா, உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) விஜயநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி செயலர் சேகர் தலைமையில் தொழில் அதிபர் அந்தோணி அம்பலம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சிவகங்கை அரிமா சங்க தலைவர் வக்கீல் ராம்பிரபாகர் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மேலாளர் கண்ணதாசன், வக்கீல்கள் மதன் மோகன், விஜய்ஆனந்த், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை ராமகிருஷ்ணா தொடக்க பள்ளியில் முன்னாள் ராணுவ வீரர் பாலு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சோழபுரம் ஸ்ரீரமணவிகாஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்கண்ணன் தலைமையில் டாக்டர் மணிவண்ணன் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிவகங்கை அருகே இடையமேலூர் விக்னேஷ்வரா மெட்ரிக் பள்ளியில் பள்ளி தாளாளர் ஜெயதாஸ் தலைமையில் அமராவதி முத்துராமன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சி மற்றும் ஆசிரியை செந்தாமரை உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகங்கை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் வெங்கடேசன் தலைமையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சமயகண்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் முதுகலை கணித ஆசிரியர் எட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டையில் உள்ள கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் முகவாண்மைக் குழு தலைவர் கண்ணப்பன் தேசிய கொடியை ஏற்றினார். பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமையில் பெற்றொர் ஆசிரியர் கழக தலைவர் ராமலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சிவகங்கை சுவாமி விவேகானந்தா உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சுதாகர் கொடி ஏற்றி வைத்தார்.

சிவகங்கையில் உள்ள நம்பிக்கை மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பயிற்சி பள்ளியில் சிறப்பு ஆசிரியர் அருண்கணேஷ் தலைமையில் அப்துல் பாரூக் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சிவகங்கை மகாத்மா பள்ளியில் சராளா கணேஷ் தலைமையில் அப்துல் பாரூக் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

Next Story