அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் வரிசையில் நின்று வாக்களித்த மாணவ-மாணவிகள்


அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் வரிசையில் நின்று வாக்களித்த மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 7:45 PM GMT)

வையம்பட்டி அருகே கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

வையம்பட்டி,

மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் அதற்கான அடிப்படை தேர்தல் தான். தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். இதற்கு முதலில் வாக்களிப்பது தான் முதல் கடமையாக உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பொதுத்தேர்தல் எப்படி நடத்தப்படுகின்றது? அந்த தேர்தல் களத்தில் உள்ளவர்கள் எப்படி களம் காண வேண்டும் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்வதோடு மட்டுமின்றி, வெற்றி பெற்றால் அவர்களுக்கான கடமை என்ன என்பதை விளக்கிடும் வகையில் ஓர் அரசு பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர் பேரவை தேர்தல் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-

அரசு மேல்நிலைப்பள்ளி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கருங்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் அவ்வப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சமூக நலன் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாணவர் பேரவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

பொதுத்தேர்தல் போலவே முன்கூட்டியே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்டுமனு தாக்கல், வாபஸ், பரிசீலனை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு, சின்னங்கள் ஒதுக்கீடு, தேர்தல் பிரசாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை போன்றவை நடைபெற்றன. தேர்தல் அலுவலர் மற்றும் பணியாளர்களாக ஆசிரியர்களே செயல்பட்டனர்.

வாக்குப்பதிவு

அதன்படி களத்தில் 6 மாணவர்களும், 6 மாணவிகளும் வேட்பாளர்களாக நின்றனர். பின்னர் வேட்பாளராக களம் கண்ட மாணவ, மாணவிகள் பல்வேறு வகுப்புகளில் உள்ள மாணவ, மாணவிகளை சந்தித்து தான் வெற்றி பெற்றால் பள்ளிக்கு ஆற்ற உள்ள பணிகள் குறித்து விளக்கிக் கூறி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். பின்னர், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பூத் சிலிப் போன்று ஒரு சீட்டு கொடுத்து அதில் அவர்களின் பெயர் மற்றும் வகுப்பு ஆகியவையும் குறித்து கொடுக்கப்பட்டது.

மேலும் வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டும் தயார் செய்து வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரு வகுப்பறையில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாணவ-மாணவிகள் வரிசையில் நின்று வாக்கு சீட்டில் வாக்கை பதிவு செய்த பின்னர் அதை 2 வாக்குப்பெட்டிகளில் போட்டுச்சென்றனர்.

வாக்கு எண்ணிக்கை

இதன் பின்னர் நேற்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆசிரிய, ஆசிரியைகள் வாக்குச்சீட்டை தனித்தனியாக பிரித்து எண்ணினார்கள். சுதந்திர தின விழா கொடியேற்ற நிகழ்வு முடிந்ததும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் வெற்றி பெற்றவர்களின் பெயரை அறிவித்தார்.

அதன்படி மாணவர்களில் நந்தகுமார் 228 வாக்குகளும், மாணவிகளில் கலைமணி 194 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். அவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மலர்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் மாணவ, மாணவிகள் திருக்குறள் மீது ஆணையிட்டு பதவி ஏற்றுக்கொண்டனர்.இந்த தேர்தலுக்கான முழுமையான ஏற்பாடுகளை பள்ளியின் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செல்வம் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர். மாணவ, மாணவிகள் மூலம் தான் விழிப்புணர்வை நிறைவாக ஏற்படுத்த முடியும் என்பதை அறிந்து அதன்படி தேர்தல் தொடர்பான நடைமுறைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன் மற்ற பள்ளிகளுக்கும் முன்னு தாரணமாக இருக்கும் வகையில் இந்த மாணவர் பேரவைத் தேர்தல் அமைந்தது.


Next Story