சுதந்திர தினவிழா: நாகர்கோவிலில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்


சுதந்திர தினவிழா: நாகர்கோவிலில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 8:46 PM GMT)

சுதந்திர தினத்தையொட்டி நாகர்கோவிலில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

நாகர்கோவில்,

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தின விழா நேற்று காலை நடந்தது.

விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசியக் கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய கொடி நிறத்தினாலான மூவர்ண பலூன்களை கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தும் பறக்க விட்டனர்.

அணிவகுப்பு மரியாதை

அதையடுத்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே திறந்த ஜீப்பில் சென்று, போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தும் உடன் சென்றார்.

மீண்டும் கொடிக்கம்பம் அமைந்துள்ள மேடைக்கு கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு வந்து சேர்ந்ததும் அணிவகுப்பு நடந்தது. போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேச பக்தி பாடலை இசையாக இசைத்தவாறு முன் செல்ல அணிவகுப்பு சென்றது. அணிவகுப்பை இன்ஸ்பெக்டர் ராணி தலைமை தாங்கி, வழி நடத்தினார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், சுஜாதா, தேவசகாயம், ஊர்க்காவல் படையை சேர்ந்த ஜெயபோஸ், ஷைலா குமாரி, தேசிய மாணவர் படை தலைவர் ராம்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸ், ஊர்க் காவல்படை, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு நடந்தது.

ரூ.12¼ லட்சம் நலத்திட்ட உதவி

அதைத்தொடர்ந்து பல்வேறு துறை சார்பில் 26 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 33 ஆயிரத்து 52 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல்படையினர் உள்பட 50 பேரை பாராட்டி, நற்சான்றுகளை கலெக்டர் வழங்கினார். சிறந்த வங்கிக்கான விருது கன்னியாகுமரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கும், நாகர்கோவில் எச்.டி.எப்.சி. வங்கிக்கும் வழங்கப்பட்டன. இந்த விழாவில், சீனாவில் நடந்த விளையாட்டு போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் போலீஸ்காரர் பாராட்டப்பட்டார்.

கலை நிகழ்ச்சி

பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மணலிக்கரை கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் வந்தே மாதரம் என்று தொடங்கும் பாடலுக்கும், பருத்திவிளை சாந்தி நிலையம் சிறப்பு பள்ளி மாணவ-மாணவிகள் தாயின் மணிக்கொடி எனத்தொடங்கும் பாடலுக்கும் நடனம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் எஸ்.என்.எம். இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் இசைக்கேற்ப யோகாவில் உள்ள பல்வேறு ஆசனங்களை செய்து காட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

நாகர்கோவில் பிஷப் ரெமிஜியுஸ் பள்ளி மாணவ-மாணவிகள் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையிலான பாடலுக்கு நடனம் ஆடியும், வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் தேசிய ஒருமைப்பாட்டு சிந்தனையுடன் கூடிய நாட்டுப்புற கலைகளுக்கு உயிர்ப்பிக்கும் வகையில் நடனம் ஆடியும், மயிலாடி எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் தேசப்பற்று மற்றும் நமது நாட்டின் விவசாயத்தின் சிறப்புகளை பறைசாற்றும் வகையில் அமைந்த பல்வேறு திரையிசை பாடல்களை ஒருங்கிணைத்து நடனம் ஆடிய விதமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

எம்.பி.- எம்.எல்.ஏ.

விழாவில் எச்.வசந்தகுமார் எம்.பி., சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, உதவி கலெக்டர்கள் விஷ்ணு சந்திரன் (நாகர்கோவில்), சரண்யாஅரி (பத்மநாபபுரம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், உதவி சூப்பிரண்டு கார்த்திக், துணை சூப்பிரண்டுகள் பாஸ்கர், பால்ராஜ், கணேசன், கார்த்திகேயன், பயிற்சி துணை சூப்பிரண்டு அருண், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் லியோடேவிட், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சுதந்திர தினவிழாவை கலெக்டரின் மனைவி அம்ருதா, மகள் ஐரா பிரசாந்த், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பெற்றோர் ராசப்பா- பாக்யலெட்சுமி, மனைவி சிந்து மற்றும் மகள் ஆகியோரும் மேடையில் அமர்ந்து கண்டுகளித்தனர். மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி தனது மகள் ஜனனி அட்சயாவையும் விழாவுக்கு அழைத்து வந்திருந்தார்.


Next Story