வியாசர்பாடியில் பயங்கரம்: காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


வியாசர்பாடியில் பயங்கரம்: காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Aug 2019 10:00 PM GMT (Updated: 15 Aug 2019 8:54 PM GMT)

வியாசர்பாடியில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் கொண்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி டி.கல்யாணபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). காங்கிரஸ் பிரமுகரான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் ஜெயக்குமார், நேற்று இரவு 8.30 மணியளவில் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்தது.

ஜெயக்குமார் என்னவென்று சுதாரிப்பதற்குள் அந்த மர்ம கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.

இதில் உடல் முழுவதும் 8 இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த ஜெயக்குமார் மயங்கி கீழே சரிந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிருக்கு போராடிய ஜெயக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story