சேலத்தில் சுதந்திர தினவிழா: கலெக்டர் ராமன் தேசியகொடி ஏற்றினார்


சேலத்தில் சுதந்திர தினவிழா: கலெக்டர் ராமன் தேசியகொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 9:45 PM GMT)

சேலத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ராமன் தேசியகொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் 85 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 9 ஆயிரத்து 700 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சேலம்,

சேலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மகாத்மா காந்தி மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொள்வதற்காக மாவட்ட கலெக்டர் ராமன் காலை 9 மணிக்கு காந்தி மைதானத்துக்கு காரில் வந்திறங்கினார்.

அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் வரவேற்றார். பின்னர், காந்தி மைதான மையப்பகுதியில் சரியாக காலை 9.05 மணிக்கு கலெக்டர் ராமன் தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர்.

அணிவகுப்பு மரியாதை

அதைத்தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வண்ண, வண்ண பலூன்களும் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்றவாறு கலெக்டர் ராமன் பார்வையிட்டார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உடன் சென்றார்.

அதைத்தொடர்ந்து பேண்டு வாத்தியம் முழங்க மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார், ஊர்காவல் படை, தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு நடத்தினர். அதை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.

85 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

இதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் ராமன் பொன்னாடை அணிவித்து கவுரவித்ததுடன் நினைவு பரிசுகளையும் வழங்கினார். இதன்பிறகு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் என மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 9 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.

கலைநிகழ்ச்சிகள்

இதையடுத்து அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டத்தில் சிறந்த சேவைபுரிந்த பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கு கலெக்டர் ராமன் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சேலம் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நாட்டுப்பற்று பாடல், வாழப்பாடி கோகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நாட்டுப்புற கலைகளுடன் இணைந்த தேசபக்தி பாடல், சூரமங்கலம் புனித சூசையப்பர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் இசைநடனம், சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் தேசபக்தி பாடல், சின்னப்பம்பட்டி கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி மாணவிகளின் தேசபக்தி பாடல், சேலம் பேர்லேண்ட்ஸ் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் எழுந்திடு தேசமே என்ற தேசப்பக்தி பாடல் மற்றும் பள்ளி மாணவர்களின் மல்லர்கம்பம் சாகசம் என 7 பள்ளிகளை சேர்ந்த 1,162 மாணவ-மாணவிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். முடிவில், கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பள்ளிகளுக்கு நினைவுப்பரிசும், மாணவ-மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் ராமன் வழங்கினார்.

விழாவில் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், சேலம் உதவி கலெக்டர் மாறன், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வேடியப்பன், மாவட்ட ஊர்க்காவல் படை கமாண்டர் பெரியசாமி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காந்தி மைதானத்திற்கு வந்த பொதுமக்கள், அதிகாரிகள் அனைவரும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Next Story