சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.303½ கோடி வருவாய் மேலாளர் தகவல்


சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.303½ கோடி வருவாய் மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:45 PM GMT (Updated: 15 Aug 2019 9:49 PM GMT)

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு நடப்பாண்டில் இதுவரை ரூ.303½ கோடி வருவாய் கிடைத்துள்ளது என மேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.

சூரமங்கலம்,

சேலம் ஜங்சனில் உள்ள ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் கோட்ட மேலாளர் சுப்பாராவ் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

சேலம் ரெயில்வே கோட்டம் 2018-19-ம் ஆண்டிற்கான தெற்கு ரெயில்வேயின் ஒட்டுமொத்த செயல்திறன் கேடயத்தை பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.303.48 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. நடப்பாண்டின் சரக்கு வருவாய் ரூ.23.60 கோடியாகும். முந்தைய ஆண்டில் இதே காலக்கட்டத்தில் ரூ.301.93 கோடி வருவாய் கிடைத்திருந்தது. பயணிகள் மூலம் ரூ.197.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது. டிக்கெட் சோதனை வருவாய் ரூ.4.75 கோடியாக உள்ளது.

கண்காணிப்பு கேமரா

4 ரெயில்வே மருத்துவமனை சுகாதார பிரிவுகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 55 ஸ்டேஷன்களில் வை-பை வசதி வழங்கப்படுகிறது. மீதியுள்ள 18 ரெயில்வே நிலையங்களில் இம்மாத இறுதிக்குள் வை-பை வசதி வழங்கப்பட உள்ளது.

ரெயில்வே நிலையங்களின் தனியாக சுற்றித்திரிந்த 284 குழந்தைகளை மீட்டு, உரிய முறையில் ஒப்படைத்துள்ளோம். ரெயில்வே பாதுகாப்பு சட்டத்தை மீறிய நபர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்து ரூ.21.73 லட்சம் அபராதம் வசூலித்துள்ளனர். ரெயில்வே ஓய்வூதியர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்க மேற்கொள்ளப்பட்டு வரும் பதிவு 75 சதவீதம் முடிந்துள்ளது.

மேம்பாட்டு பணி

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தின் முன்பகுதி மேம்பாட்டு பணி முடிவடைந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் ஒரு எஸ்கலேட்டர், லிப்ட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் சுரங்கப்பாதை உள்ளிட்டவை அமைத்து, 6 இடங்களில் ஆளில்லா ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 26 ஆளில்லா கேட்டுகள் இவ்வாண்டு இறுதிக்குள் மூடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சேலம் கோட்ட கூடுதல் மேலாளர் அண்ணாதுரை, கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை கமிஷனர் சீனிவாசராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story