கடலூரில், சுதந்திரதின விழா கொண்டாட்டம், கலெக்டர் அன்புசெல்வன் தேசியகொடி ஏற்றினார்


கடலூரில், சுதந்திரதின விழா கொண்டாட்டம், கலெக்டர் அன்புசெல்வன் தேசியகொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:45 PM GMT (Updated: 15 Aug 2019 10:23 PM GMT)

கடலூரில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் அன்புசெல்வன் தேசியகொடி ஏற்றி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கடலூர்,

சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள காலை 8 மணியில் இருந்து பொதுமக்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் வந்திருந்தனர்.

கலெக்டர் அன்புசெல்வன் காலை 9 மணிக்கு அண்ணா விளையாட்டு மைதானத்துக்கு வந்தார். அவரை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் தலைமையில் அதிகாரிகள் வரவேற்று கொடிமேடைக்கு அழைத்துச்சென்றனர். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவும் உடன் வந்தார்.

இதைத்தொடர்ந்து காலை 9.05 மணிக்கு கலெக்டர் அன்புசெல்வன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய கொடியின் வண்ணங்களை நினைவு கூறும் வகையில் மூவர்ண பலூன்களை கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் பறக்க விட்டனர்.

இதன் பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலெக்டரை திறந்த ஜீப்பில் அழைத்துச்சென்றார். தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல்படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள், இளம் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சாரணர் படையினர் மைதானத்தில் வரிசையாக அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் அன்புசெல்வன் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்குதல், துறை வாரியாக சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முதலாவதாக கடலூர் குளோபல் சிறப்பு பள்ளி மாணவர்கள் எனது இந்தியா என்ற பாடலுக்கு நடனமாடினார்கள். இவர்களை தொடர்ந்து ஓயாசிஸ் சிறப்பு பள்ளியை சேர்ந்த மாணவ- மாணவிகள் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நம் இந்தியா என்பதையும், நம் மூதாதையர்கள் வளர்த்த கிராமிய கலைகளையும் நினைவு கூறும் வகையில் நடனமாடினர். 3-வதாக புனித அன்னாள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவிகள் யோகாவுடன் நடனம் ஆடியும், அவர்களை தொடர்ந்து நெய்வேலி என்.எல்.சி. பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் சுதந்திரத்துக்காக போராடிய தீரன்சின்னமலை குறித்த நாடகத்தை தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். 5-வதாக கடலூர் துறைமுகம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலப்பு தேசபக்தி பாடலுக்கு நடனமாடியது நாம் தாய்நாட்டை காக்க எல்லையில் இரவு பகலாக கண்விழித்து போராடிய வெற்றி வீரர்களை நினைவு கூறும் வகையில் அமைந்திருந்தது. இதையடுத்து பி.முட்லூர் கருணைவிழிகள் இல்ல மாணவர்களிள் பறையாட்டமும் பார்வையாளர்களை மகிழ்வித்தது. இவர்களை தொடர்ந்து மேல்பட்டாம்பாக்கம் கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பரங்கிப்பேட்டை சேவாமந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நடனமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கலைநிகழ்ச்சியில் முதல் இடம் பிடித்த கடலூர் துறைமுகம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 2-வது இடம் பிடித்த பி.முட்லூர் கருணை விழிகள் இல்லம், 3-வது இடம் பிடித்த கடலூர் புனித அன்னாள் மழலையர் பள்ளி ஆகியவற்றுக்கும், இதர பள்ளிகளுக்கும் ஆறுதல் பரிசுகளையும் கலெக்டர் அன்புசெல்வன் வழங்கி பாராட்டினார்.

விழாவில் சப்-கலெக்டர் சரயூ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சந்தோஷினிசந்திரா, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) பரிமளம், துணை ஆட்சியர்(பயிற்சி) ஷாகிதா பர்வீன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி பழனி, வேளாண் இணை இயக்குனர் முருகன், முன்னோடி வங்கிமேலாளர் ஜோதிமணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(கட்டுமானம்) பாபு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை தாசில்தார் ஜான்சிராணி, வருவாய் ஆய்வாளர் சஞ்சய் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Next Story