விற்பனையாளரை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம்


விற்பனையாளரை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2019 11:15 PM GMT (Updated: 16 Aug 2019 6:53 PM GMT)

விற்பனையாளரை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி தஞ்சையில் டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஏ.ஐ.டி.யூ.சி. டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கோட்டீஸ்வரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி டாஸ்மாக் பணியாளர்கள் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் கண்ணன், தொ.மு.ச. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட தலைவர் சேவையா, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் துரை.மதிவாணன், டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க தலைவர் பாலு, வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி கணபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் ராஜாவை கழுத்தை அறுத்து படுகொலை செய்து விற்பனை தொகையை கொள்ளையடித்து சென்ற சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட ராஜா குடும்பத்திற்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி பணியாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பணியாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைத்து, டாஸ்மாக் கடையை இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட ராஜா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் டாஸ்மாக் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இவர்களில் சிலர் கருப்பு சட்டையும், பலர் சட்டையில் கருப்பு சின்னமும் அணிந்திருந்தனர்.

Next Story