கேட்பாரற்று சாவியுடன் நின்ற மோட்டார் சைக்கிளை சொந்த வேலைக்கு எடுத்துச்சென்ற வாலிபர்; போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பு


கேட்பாரற்று சாவியுடன் நின்ற மோட்டார் சைக்கிளை சொந்த வேலைக்கு எடுத்துச்சென்ற வாலிபர்; போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Aug 2019 11:30 PM GMT (Updated: 16 Aug 2019 9:43 PM GMT)

திருப்பூரில் கேட்பாரற்று சாவியுடன் நின்ற மோட்டார்சைக்கிளை சொந்த வேலைக்கு எடுத்துச்சென்று விட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாநகர போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருப்பது இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் தான். தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் மாநகரில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ரெயில் நிலையம், வணிக வளாகம் குறிப்பாக டாஸ்மாக் பார்களுக்கு முன்பு நிறுத்தி செல்லும் இருசக்கர வாகனங்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விடுகிறார்கள். திருட்டு நடந்த இடத்துக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து திருட்டு ஆசாமிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

சமீபகாலமாக திருட்டு போகும் இருசக்கர வாகனங்கள் பெரும்பாலும் சாவியோடு நிறுத்தி சென்றவை தான். சாவியை மோட்டார் சைக்கிளிலேயே வைத்து விட்டு செல்வதால் அதை நோட்டமிடும் ஆசாமிகள் அந்த மோட்டார் சைக்கிளை லாவகமாக திருடிச்சென்று மாயமாகி விடுகிறார்கள். போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது ஒருபுறம் இருந்தாலும், வாகன ஓட்டிகளும் அசட்டையாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது.

இதுபோல் சாவியுடன் நிறுத்திச்சென்ற மோட்டார் சைக்கிளை தூக்கிச்சென்ற வாலிபர் தனது சொந்த வேலைகளை முடித்து விட்டு கேட்பாரற்று நின்றதாக கூறி போலீஸ் நிலையத்தில் அந்த வாகனத்தை ஒப்படைத்த சுவாரஸ்யமான சம்பவமும் திருப்பூரில் நடந்துள்ளது. திருப்பூர் பென்னி காம்பவுண்ட் பகுதியில் ஒரு கட்டிடத்தின் முன்பு காலையில் சாவியுடன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு என்ஜினீயர் ஒருவர் கட்டிட பணியை கவனிக்க சென்றார். மதியம் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். வழக்கமான இடத்தில் நிறுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் மாயமானதை அறிந்து பதற்றம் அடைந்த அவர் அருகில் உள்ள வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் சாவியை மோட்டார் சைக்கிளிலேயே வைத்து சென்றதாக தெரிவித்தார். அவருக்கு அறிவுரை வழங்கிய போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை பெற்று சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தேடுதல் பணியை முடுக்கி விட்டனர். மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த என்ஜினீயரும் மாநகரின் பல பகுதிகளில் தேடினார்.

இந்தநிலையில் அன்று மாலை வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் வந்தார். பென்னி காம்பவுண்ட் பகுதியில் கேட்பாரற்று சாவியுடன் இந்த மோட்டார் சைக்கிள் நின்றதால், அதை எடுத்து ஒப்படைக்க வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அந்த வாகனத்தை பார்த்தபோது அது, என்ஜினீயருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

உடனே போலீசார் அந்த வாலிபரிடம், இந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று அதன் உரிமையாளர் மதியமே வந்து புகார் தெரிவித்துவிட்டார். ஆனால் இவ்வளவு நேரம் மோட்டார் சைக்கிளை ஒப்படைக்காமல் என்ன செய்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த வாலிபரோ, சாவியோடு மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. 1 மணி நேரத்துக்கும் மேலாக கவனித்துக்கொண்டிருந்தேன். யாரும் மோட்டார் சைக்கிளை எடுக்க வரவில்லை. இதனால் அந்த மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைக்கலாம் என்று நினைத்து எடுத்தேன். எனக்கு கொஞ்சம் சொந்த வேலை இருந்தது. அதற்கு மோட்டார் சைக்கிளும் தேவைப்பட்டது. இதனால் அந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு எனது சொந்த வேலை அனைத்தையும் முடித்தேன். அதற்குள் மாலை நேரம் வந்து விட, போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வந்தேன் என்றார். போலீசார் தேடி வந்த மோட்டார் சைக்கிளை, போலீஸ் நிலையத்துக்கே வந்து ஒப்படைத்த வாலிபரால் பரபரப்பு தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது.

இதைக்கேட்டு போலீசார் கோபத்தின் உச்சிக்கே சென்றாலும், எடுத்த மோட்டார் சைக்கிளை காலதாமதம் ஏற்பட்டாலும் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒப்படைத்து விட்டாரே என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தேடியலையும் வேலை மிச்சமடைந்த மகிழ்ச்சியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை கடிந்து கொண்டு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

பின்னர் மோட்டார் சைக்கிளை அதன் உரிமையாளரான என்ஜினீயரிடம் ஒப்படைத்தனர். சாவியுடன் வைத்து சென்றதால் மோட்டார் சைக்கிளை இழந்து சோகமடைந்த என்ஜினீயர், அந்த மோட்டார் சைக்கிள் திரும்ப கிடைத்ததும் மகிழ்ச்சியோடு போலீசாருக்கும், அந்த வாலிபருக்கும் நன்றி சொல்லி சென்றார்.

Next Story