ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 27ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீட்டிப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 27ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 17 Aug 2019 11:15 PM GMT (Updated: 17 Aug 2019 6:42 PM GMT)

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 27ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை நேற்று 10-வது நாளாக நீடித்தது.

பென்னாகரம்,

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. அங்கு கடந்த வாரத்தில் கனமழை பெய்ததால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டின. இதனால் இந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 12-ந்தேதி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 3 லட்சம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து வந்ததால் ஐந்தருவிகள் மூழ்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தொங்கு பாலத்தை தொட்டபடி புது வெள்ளம் சீறிப்பாய்ந்தது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் தொங்குபாலம் பார்வையாளர் கோபுரம், நடைபாதை, மெயின் அருவி பகுதி ஆகியவை சேதமடைந்தன. இதேபோல் ஒகேனக்கல்லில் கர்நாடகா மாநில எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதற்காக கட்டப்பட்ட பாலம் மற்றும் பார்வையாளர் கோபுரம் ஆகியவையும் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்து உள்ளன.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடக மாநிலத்தில் மீண்டும் மழை பெய்வதால் அங்குள்ள அணைகளில் இருந்து கூடுதலாக மீண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனிடையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நேற்று 10-வது நாளாக நீடித்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அருவிகள், காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

113 அடியை எட்டிய மேட்டூர் அணை

இதனிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த வாரம் வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்தானது படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 112.49 அடியாக இருந்த நீர்மட்டம் மாலையில் 112.80 அடியாக உயர்ந்தது. இரவில் நீர்மட்டம் 113 அடியை எட்டியது.

Next Story