நாகர்கோவில் அருகே விபத்து மின்கம்பத்தில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர் தப்பினர்


நாகர்கோவில் அருகே விபத்து மின்கம்பத்தில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 17 Aug 2019 11:00 PM GMT (Updated: 17 Aug 2019 8:43 PM GMT)

நாகர்கோவில் அருகே மின்கம்பத்தில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர் தப்பினர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே வல்லன்குமாரன் விளையை சேர்ந்தவர் சிவா (வயது 24). இவரது நண்பர் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த ஜோசப் (23). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு கியாஸ் மூலம் இயங்கும் ஆம்னி காரில் மணக்குடியில் இருந்து மேலகிருஷ்ணன்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். தெங்கம்புதூர் அருகே உள்ள மாலைஅணிந்தான் குடியிருப்பு பகுதியில் சென்ற போது திடீரென டயர் வெடித்து கார் நிலைதடுமாறி ஓடியது. பின்னர் சாலை ஓரம் நின்ற மின் கம்பத்தில் கார் மோதி நின்றது.

இந்த விபத்தில் காரில் இருந்த சிவா மற்றும் ஜோசப் காயமடைந்தனர். உடனே அவர்கள் காரில் இருந்து வெளியே வந்தனர்.

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

சிறிது நேரத்தில் காரில் இருந்து கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் கார் தீ பற்றி எரிந்தது. இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. காரில் இருந்த இரண்டு பேரும் வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்த இரண்டு பேரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story