சென்னை விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் தங்கம் பறிமுதல் இலங்கை பெண்ணிடம் விசாரணை
கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக இலங்கை பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த அழகேஸ்வரி(வயது 48) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அதில் அவர், உள்ளாடைக்குள் தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 520 கிராம் தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனர்.
இந்த தங்கத்தை அவர் யாருக்காக கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? என பிடிபட்ட இலங்கை பெண் அழகேஸ்வரியிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story