மானாமதுரையில் சாலையோரத்தில் வீசப்பட்ட மாத்திரைகள்


மானாமதுரையில் சாலையோரத்தில் வீசப்பட்ட மாத்திரைகள்
x
தினத்தந்தி 17 Aug 2019 10:15 PM GMT (Updated: 17 Aug 2019 9:58 PM GMT)

மானாமதுரையில் சாலையோரத்தில் ஆங்காங்கே மாத்திரைகள் வீசப்பட்டிருந்தன.

மானாமதுரை,

மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையோரத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே மாத்திரைகள் கொட்டப்பட்டு அவை குவியலாக கிடந்தன. இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து பொதுசுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் அந்த மாத்திரைகளை பார்வையிட்டனர். அந்த மாத்திரைகள் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கப்படும் இரும்பு சத்து மாத்திரைகள் என்பது தெரிய வந்தது. மேலும் அவை காலாவதியான மாத்திரை என்றும் தெரியவந்தது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இவ்வாறு காலாவதியான மாத்திரைகளை சாலையோரத்தில் கொட்டுவது மிகவும் ஆபத்தானதாகும்.

இவற்றை மேய்ச்சலுக்காக வரும் ஆடு, மாடுகள் மற்றும் மான்கள் சாப்பிட்டால் அவற்றின் நிலைமை மேசமாகும். மேலும் இந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் இதை எடுத்து அறியாமல் சாப்பிட்டால் அதன் மூலம் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படும். காலாவதியான மாத்திரைகளை முறையாக குழிதோண்டி புதைக்க வேண்டும் என்பது தான் விதிமுறை. ஆனால் இதை சிலர் பொறுப்பற்ற தன்மையுடன் இவ்வாறு சாலையோரத்தில் கொட்டி விட்டு சென்றது கண்டிக்கும் செயலாகும்.

எனவே இவ்வாறு சாலையோரத்தில் காலாவதியான மாத்திரைகள் கொட்டி விட்டு சென்றவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த பகுதி மக்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

Next Story