உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் பாதுகாப்பு: பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் - முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்


உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் பாதுகாப்பு: பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் - முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 Aug 2019 12:28 AM GMT (Updated: 18 Aug 2019 12:28 AM GMT)

உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும், எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு, 

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதனால் முன் எச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படியும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபற்றி கர்நாடக மாநில போலீசாருக்கும், மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, பெங்களூரு, மங்களூரு, மைசூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக பெங்களூருவில் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், விதானசவுதா கட்டிடம், கர்நாடக ஐகோர்ட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும் படியாக சுற்றி திரியும் நபர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் ஊடுருவல் மற்றும் பாதுகாப்பு குறித்து டெல்லியில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருப்பதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நேற்று (அதாவது நேற்று முன்தினம்) பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரு விதானசவுதா, விகாச சவுதா, கவர்னர் மாளிகை, ரெயில் மற்றும் பஸ் நிலையங்களிலும், மெட்ரோ ரெயில் மற்றும் விமான நிலையங்களிலும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு எச்சரிக்கையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாலும், போலீசார் உஷார் நிலையில் இருப்பதாலும் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும். அதனால் பொதுமக்கள் யாரும் எக்காரணத்தை கொண்டும் பயப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் தேவையில்லாமல் வதந்திகள் பரவும். அதனால் தேவையில்லாமல் பரப்பப்படும் வதந்திகளை மக்கள் காது கொடுத்து கேட்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனெனில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக சாத்தியங்கள் உள்ளதாக மட்டுமே மத்திய அரசு கூறியுள்ளது. கர்நாடகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை. மாநிலத்தில் முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதால் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறுவதில்லை.

இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார். 

Next Story