நெல்லையில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த முதியவரால் பரபரப்பு


நெல்லையில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த முதியவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Aug 2019 9:45 PM GMT (Updated: 18 Aug 2019 8:44 PM GMT)

நெல்லையில் நேற்று பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை, 

நெல்லை டவுன் அனவரத விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 65). இவர் நேற்று மதியம் நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்று பாலத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென பாலத்தில் ஏறி அதில் இருந்து ஆற்றில் குதித்தார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஆற்றில் குதித்து காயத்துடன் கிடந்த பாலசுப்பிரமணியத்தை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் என்ன காரணத்திற்காக ஆற்றில் குதித்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story