பாதுகாப்புத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு: துப்பாக்கி தொழிற்சாலை முன்பு பெண் ஊழியர்கள் உண்ணாவிரதம்


பாதுகாப்புத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு: துப்பாக்கி தொழிற்சாலை முன்பு பெண் ஊழியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 18 Aug 2019 10:45 PM GMT (Updated: 18 Aug 2019 8:58 PM GMT)

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை முன்பு நேற்று பெண் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்மலைப்பட்டி,

மத்திய அரசின் பாதுகாப்புத்துறையின் கீழ் நாடு முழுவதும் 41 படைக்கலன் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் ஆயுதங்கள் ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படைக்கலன் தொழிற்சாலைகளை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. மத்திய அரசின் இந்த செயலை கண்டித்தும், இந்த தொழிற்சாலைகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும் பாதுகாப்புத்துறையின் ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

உண்ணாவிரத போராட்டம்

அதன் தொடர்ச்சியாக திருச்சி திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை பெண் ஊழியர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து மஞ்சு என்பவர் தலைமையில் தொழிற்சாலை முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை துப்பாக்கி தொழிற்சாலை போராட்ட கூட்டு குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தொடங்கி வைத்தார்.

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடுமுழுவதும் உள்ள படைக்கலன் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு மாதம் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story