இயற்கை பேரிடர் காலங்களில் ராமேசுவரம் தீவுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் தாழை மரங்கள்


இயற்கை பேரிடர் காலங்களில் ராமேசுவரம் தீவுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் தாழை மரங்கள்
x
தினத்தந்தி 18 Aug 2019 10:30 PM GMT (Updated: 18 Aug 2019 9:01 PM GMT)

இயற்கை பேரிடர் காலங்களில் ராமேசுவரம் தீவு பகுதியில் பாதுகாப்பு அரணாக தாழை மரங்கள் விளங்குகின்றன.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவு பகுதியை இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றுவதில் தாழை மரங்களும் பாதுகாப்பு அரணாக விளங்கிவருகின்றன. பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் இருந்து முகம்மதியார்புரம், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள நம்புநாயகி அம்மன் கோவில் வரை கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் ஏராளமான தாழை மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக குந்துகால் மற்றும் நம்புநாயகி அம்மன் கோவில் அருகிலும் ஏராளமான தாழை மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.இது பற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தாழம்பூ மரம், தாழை மரம் என்று அழைக்கப்படும் இவ்வகை மரங்கள் சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் அலைகளை கட்டுப் படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் ராமேசுவரம் தீவு பகுதிக்கு தாழம்பூ மரங்கள் ஒரு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது.தாழம்பூ மரங்களில் இருவகை உள்ளன.ஒன்று ஆண் மரம், மற்றொன்று பெண் மரம்.பெண் மரத்தில் மட்டுமே காய் காய்க்கும். ஆனால் பூ பூக்காது.ஆண் மரத்தில் மட்டுமே பூ பூக்கும். திருஉத்தரகோசமங்கை கோவிலில் சாமிக்கு பூஜை செய்ய தாழம்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது.தாழம்பூ வாசனைக்கு பாம்பு வரும் என்று சொல்வது உண்மை இல்லை.தாழம்பூ மரம் மிகவும் அடர்த்தியான மரமாக உள்ளதால் குளிர்ச்சிக்காக தாழம்பூ மரத்திற்கு பாம்புகள் வரும் என்பது தான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி குந்துகால் பகுதியில் 55 ஆண்டுகளாக வசித்து வரும் முருகேசன் கூறியதாவது:-

ஆண்டுதோறும் ஆடி மாதம் தாழம்பூ பூ பூக்கும் சீசனாகும்.தாழம் பூ மரத்தில் பூ பூக்கும் சீசன் தொடங்கியதும் பூவை பறிக்க பலர் இங்கு வந்து பூக்களை பறித்து விட்டு செல்வார்கள்.குந்துகால் முதல் தங்கச்சிமடம் வரை ஏராளமான தாழம் பூ மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. பல மரங்கள் தீ வைத்தும் எரிக்கப்பட்டும்,சில மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.இருக்கின்ற மரங்களை பாதுகாக்கவும்,கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் தாழம்பூ மரங்களை அதிக அளவில் வளர்க்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். சுனாமியின்போது ராமேசுவரம் தீவு பகுதிகளில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story