தூக்கில் தொங்கியவர்களை இறந்ததாக கூறியதால் ஆத்திரம்: மதுரை அரசு ஆஸ்பத்திரி ஜன்னல்களை உடைத்து உறவினர்கள் ரகளை-பரபரப்பு


தூக்கில் தொங்கியவர்களை இறந்ததாக கூறியதால் ஆத்திரம்: மதுரை அரசு ஆஸ்பத்திரி ஜன்னல்களை உடைத்து உறவினர்கள் ரகளை-பரபரப்பு
x
தினத்தந்தி 18 Aug 2019 11:00 PM GMT (Updated: 18 Aug 2019 10:43 PM GMT)

இருவேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு கொண்டனர். அரசு ஆஸ்பத்திரியில் அவர்களது உடலை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்ததால் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

மதுரை,

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் வீட்டில் தூக்குப்போட்ட ஒரு வாலிபரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு கொண்டு வந்தனர். இதேபோல் திடீர்நகர் பகுதியில் தூக்குப்போட்ட மற்றொரு வாலிபரையும் அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அந்த 2 பேருடன் வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களும் அங்கு திடீர் ரகளையில் ஈடுபட்டனர். ஆஸ்பத்திரி கட்டிடத்தின் ஜன்னல்களை அடித்து உடைத்தனர். மேலும் அங்கிருந்த மின்சார தகவல் பலகையையும் உடைத்து கூச்சலிட்டனர். இதனால் அவரச சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஆஸ்பத்திரியின் புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் பற்றாக்குறையின் காரணமாக போலீசார் சம்பவ இடத்துக்கு வருவதற்கு சற்று தாமதமானது. பின்னர் அங்கு வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் தான் நோயாளிகள் உள்ளிட்டவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் கூறுகையில், “திடீர்நகர் மற்றும் பெத்தானியாபுரம் பகுதியில் வீட்டில் தூக்குப்போட்டு கொண்ட 2 வாலிபர்களை இங்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இவர்களில் ஒருவர் சட்டக்கல்லூரி மாணவர் என தெரிகிறது. இதனால் அவர்களுடன் வந்தவர்கள் ஆத்திரத்தில் ஆஸ்பத்திரி ஜன்னல்களையும், அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.

போலீசார் சற்று தாமதமாக வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே இங்கு பாதுகாப்பு பணிக்கு போதுமான போலீசாரை நியமிக்க வேண்டும்“ என்றனர்.

Next Story