தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் மோசடி ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது


தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் மோசடி ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2019 10:45 PM GMT (Updated: 19 Aug 2019 2:07 PM GMT)

திருப்பூரில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீரபாண்டி,

திருப்பூர்–காங்கேயம் ரோடு செம்மாந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகள் ராம்பிரியா (வயது 32). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் விநாயக் குமார் என்பவருக்கும் கடந்த 2009–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் இருவரும் 6 மாத காலம் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விநாயக் குமார், ராம் பிரியாவை விட்டு பிரிந்து சென்றதாக தெரிகிறது.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டித்துரை (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தொழில் தொடங்குவதாக பாண்டித்துரை ரூ.10 லட்சத்தை ராம் பிரியாவிடம் பெற்றதாக தெரிகிறது. இதனை பலமுறை ராம் பிரிய திருப்பி கேட்டும் தராததால் போலீசாரிடம் புகார் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டித்துரை தனது அண்ணன் ராஜேஷ்குமார் (29) என்பவருடன் ராம் பிரியாவின் வீட்டிற்கு சென்று மிரட்டி உள்ளனர். இதுகுறித்து ராம் பிரியா திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார், பாண்டித்துரை மற்றும் ராஜ்குமார் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Next Story