சாலையை பயன்படுத்த விமானப்படை அதிகாரிகள் தடை: கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


சாலையை பயன்படுத்த விமானப்படை அதிகாரிகள் தடை: கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2019 11:00 PM GMT (Updated: 19 Aug 2019 7:06 PM GMT)

சாலையை பயன்படுத்த விமானப்படை அதிகாரிகள் தடை விதித்ததை கண்டித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். விவசாய சங்க கூட்டு இயக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். திடீரென அவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் விவசாயிகள் கூறும்போது, கல்லணை கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். சம்பா சாகுபடி செய்ய ஏதுவாக புதிய கடன் வழங்க வேண்டும். காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். கஜா புயலால் பாதித்த மாவட்டங்களை தேசிய பேரிடர் மாவட்டங்களாக அறிவித்து நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மாதர் தேசிய சம்மேளனம்

இந்திய மாதர் தேசிய சம்மேளன ஒன்றிய செயலாளர் கண்ணகி, தலைவர் ரெங்கநாயகி, பொருளாளர் லதா ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், வீட்டுமனை இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் சமூக அநீதிகளை தடுக்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வங்கி கணக்கை முடக்கும் போக்கை வங்கி நிர்வாகம் கைவிட வேண்டும். முதியோர் உதவித்தொகையை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

கிராமமக்கள்

தஞ்சையை அடுத்த இனாத்துக்கான்பட்டி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பள்ளி குழந்தைகளுடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஒப்படைப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீசார் வந்து பள்ளி குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என கூறினர். இதனால் கிராமமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை அழைத்து மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது கிராமமக்கள் கூறும்போது, விமானப்படை தளம் அமைக்க எங்கள் கிராமத்தில் 1,500 ஏக்கர் விளை நிலங்கள் கடந்த 1995-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. நாங்கள் பயன்படுத்தி வந்த சாலையில் விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது. விமானப்படை தள அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக போடப்பட்டுள்ள தார்ச்சாலையை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்தனர். ஆனால் திடீரென கடந்த 16-ந் தேதி முதல் அந்த சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தில் இருந்து வெளியே செல்ல வேறுவழி இல்லாமல் முடங்கி இருக்கிறோம்.

மாற்று கிராமம்

பள்ளி வேன்களும் கிராமத்திற்குள் வர முடியாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. வேலைக்கு செல்ல முடியவில்லை. ஏதாவது துக்க நிகழ்வு எங்கள் கிராமத்தில் நடந்தால் வெளியூரில் இருந்து வரும் உறவினர்களை கிராமத்திற்குள் செல்ல விமானப்படை வீரர்கள் அனுமதிப்பது இல்லை. மாற்று கிராமம் அமைத்து தரும் வரை வழக்கம்போல் சாலையை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். பள்ளி வேன்கள் வந்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும். வெளியூரில் இருக்கும் உறவினர்கள் வந்தால் கிராமத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றனர். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் அளித்த மனுவில், 1 மாதமாக வகுப்புகள் சரிவர நடைபெறவில்லை. இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். பருவத்தேர்வு வருவதால் அதற்குள் முறையாக வகுப்புகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Next Story