தொடர் மழையால் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் பாதிப்பு; தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது


தொடர் மழையால் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் பாதிப்பு; தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது
x
தினத்தந்தி 19 Aug 2019 11:15 PM GMT (Updated: 19 Aug 2019 7:24 PM GMT)

கீழடி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி ஊராட்சிக்குட்பட்ட பல பகுதியில் மத்திய, மாநில தொல்லியல்துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பண்டைய தமிழர் நாகரிகத்தை அறியும் வகையில் 4 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்தன. அதில் செங்கற்களால் பெரிய சுவர்கள், தண்ணீர் தொட்டிகள், மருத்துவ குடுவைகள், இரும்பினால் ஆன ஈட்டிகள், கத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை சிறிய பானைகள், ஓடுகள், வட்ட வடிவிலான பெரிய பானை, இரும்பு பொருட்கள், எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், செம்பினால் ஆன பொருட்கள், செப்பு காசுகள், சிறிய அடுக்கு சுவர், நீளமான சுவர், இரட்டைச்சுவர், வட்ட சுவர், 8 அடுக்கு உறைகிணறு உள்பட 650 பொருட்கள் கிடைத்தன. மேலும் தற்போது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருப்புவனம் பகுதியில் பலத்த மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் இந்த ஆராய்ச்சி பணிகள் தற்போது பாதிக்கப்பட்டு முடங்கிய நிலையில் உள்ளன.

இதையடுத்து அந்த குழிகளில் தேங்கிய தண்ணீரை வாளிகள் மூலம் இறைத்து அப்புறப்படுத்தி அந்த தண்ணீரை அங்கிருந்து மின் மோட்டார் மூலம் அருகே உள்ள தோட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச்சுவர் உள்ள பகுதியில் தேங்கிய மழைநீரை மின் மோட்டார் மூலம் வெளியே எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். சில குழிகளில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்ட பின்னர் அந்த இடம் சேறும், சகதியுமாக காட்சியளித்தது.

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட இட்டைச் சுவர் அமைந்துள்ள குழியில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஈரப்பதத்தை காய வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து மழை நின்ற பின்னர் வெயில் அடித்தால் மட்டும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறும் நிலை உள்ளது.

Next Story