பிறந்து 3 நாட்கள் ஆன குழந்தை வயிற்றில் இருந்த நீர்க்கட்டி அகற்றம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை


பிறந்து 3 நாட்கள் ஆன குழந்தை வயிற்றில் இருந்த நீர்க்கட்டி அகற்றம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 19 Aug 2019 10:45 PM GMT (Updated: 19 Aug 2019 9:08 PM GMT)

பிறந்து 3 நாட்கள் ஆன பச்சிளம் பெண் குழந்தையின் வயிற்றில் இருந்த கட்டியை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அகற்றி சாதனை படைத்தனர்.

நாகர்கோவில்,

குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அந்த பச்சிளம் பெண் குழந்தையின் வயிறு வீக்கத்துடன் இருந்தது. உடனே அந்த குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தையின் வயிற்றில் பெரிய கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து டாக்டர்கள் அறிவுரைப்படி மேல்சிகிச்சைக்காக குழந்தை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. பரிசோதனை செய்ததில், குழந்தையின் வயிற்று பகுதி முழுவதும் 10 சென்டி மீட்டர் நீளத்துக்கு நீர்கட்டி, குடலுடன் ஒட்டி இருந்தது தெரிய வந்தது. இந்த வகையான நோய், பிறக்கும் 40 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வரும். இதனை “டெரோடேமி“ என்று அழைப்பார்கள்.

அறுவை சிகிச்சை

எனவே நான் (டீன் பாலாஜிநாதன்), ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் பிரின்ஸ் பயஸ், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன் தலைமையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக டாக்டர் குழுக்கள் நியமிக்கப்பட்டன. பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்வது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும்.

ஆனாலும் குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து, 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. இதில் வயிற்று குடலுடன் ஒட்டி இருந்த நீர்க்கட்டியை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர். அந்த நீர்கட்டி முழுவதும் ரத்தம் கலந்த நீராக இருந்தது. இதனை உடனே நீக்காவிட்டால், புற்றுநோய் கட்டியாக மாறி விடும். தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதுபோன்ற அறுவை சிகிச்சை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இதுதான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை படைத்த டாக்டர்களை பாராட்டுகிறேன். இவ்வாறு டீன் பாலாஜிநாதன் கூறினார்.பேட்டியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள் உடன் இருந்தனர்.

Next Story