பட்ஜெட்டுக்கு அனுமதி மறுத்த விவகாரம்: காங்கிரஸ்-பா.ஜனதா கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்-மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு


பட்ஜெட்டுக்கு அனுமதி மறுத்த விவகாரம்: காங்கிரஸ்-பா.ஜனதா கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்-மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 12:35 AM GMT (Updated: 20 Aug 2019 12:35 AM GMT)

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக நேற்று மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ்-பா.ஜனதா கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி அரங்கில் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. மேயர் கங்காம்பிகே தலைமையில் நடந்த கூட்டத்தில் துணை மேயர் பத்ரேகவுடா, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் ஆளும் கட்சி தலைவர் அப்துல் வாஜித் எழுந்து பேசினார்.

அப்போது அவர், ‘மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அரசு அனுமதி அளித்து வளர்ச்சி பணிகளை செய்ய தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் எடியூரப்பா முதல்-மந்திரியான நிலையில் பட்ஜெட்டுக்கு தடை விதித்துள்ளார். இதனால் அபிவிருத்தி பணிகள் முடங்கி உள்ளன. மாநில அரசு பட்ஜெட்டுக்கு அனுமதி அளிக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை‘ என்றார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் பத்மநாப ரெட்டி எழுந்து பேசினார். அப்போது அவர், ‘நீங்கள் ரூ.13 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி கேட்டுள்ளர்கள். ஆனால் நிதித்துறை ரூ.9 ஆயிரம் கோடிக்கு மட்டும் அனுமதி கொடுத்தது. இருப்பினும் பெங்களூரு நகர வளர்ச்சி மந்திரியாக இருந்தவர் அந்த தொகையை ரூ.12,950 கோடியாக உயர்த்தி கொண்டார். இதனால் தான் பட்ஜெட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட் மதிப்பை உயர்த்துவதற்கு நகர வளர்ச்சித்துறைக்கு எந்த அனுமதியும் கிடையாது‘ என்றார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசும்போது, ‘பா.ஜனதா கட்சி மீது நம்பிக்கை வைத்து பெங்களூருவில் இருந்து 3 எம்.பி.க்களை வாக்காளர்கள் தேர்வு செய்தனர். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?‘ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வேளையில் சிவராஜூவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கவுன்சிலர்களும், பத்மநாபரெட்டிக்கு ஆதரவாக பா.ஜனதா கவுன்சிலர்களும் பேசினர். அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வேளையில் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தலையீட்டு வாக்குவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன்பிறகு பேசிய பத்மநாபரெட்டி, ‘சில தொழில்நுட்ப ரீதியான பிரச்சினையால் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கும்‘ என்றார்.

நேற்று நடந்த மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. தனியார் ஓட்டலில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவை கவுன்சிலர்கள் சாப்பிட்டனர். அப்போது கவுன்சிலர் ஒருவரின் உணவில் 2 கரப்பான்பூச்சிகள் செத்து கிடந்தன. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பிற கவுன்சிலர்களிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர். மேலும் ஆளும்கட்சி மீது பா.ஜனதா கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். ஆளும்கட்சியின் அலட்சியத்தால் தான் தரமான உணவுகள் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். ஏற்கனவே கவுன்சிலர்களுக்கு இந்திரா உணவகத்தின் உணவுகள் வழங்கப்பட்டன. இதற்கு பா.ஜனதா கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அவர்களுக்கு தனியார் ஓட்டலில் இருந்து உணவுகள் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் நேற்று அளித்த பேட்டியில், ‘பெங்களூரு நகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் அடுத்த மாதம்(செப்டம்பர்) 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கும், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமமும் ரத்து செய்யப்படும். அதேபோல் வருகிற 1-ந் தேதியில் இருந்து குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து துப்புரவு தொழிலாளர்களிடம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் கண்ட, கண்ட இடங்களில் குப்பைகளை வீசுபவர்களிடம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும். இதனால் பொதுமக்கள் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்‘ என்றார்.

Next Story