கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு தினமும் ரெயில் இயக்க வேண்டும் வசந்தகுமார் எம்.பி.யிடம் மனு


கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு தினமும் ரெயில் இயக்க வேண்டும் வசந்தகுமார் எம்.பி.யிடம் மனு
x
தினத்தந்தி 20 Aug 2019 10:00 PM GMT (Updated: 20 Aug 2019 2:33 PM GMT)

கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு தினமும் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வசந்தகுமார் எம்.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில், வடக்கு கோணம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நடந்தது. விழாவில் கோட்டார் மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், வசந்தகுமார் எம்.பி. கலந்து கொண்டு பங்கு மக்களுக்கு திருவிழா வாழ்த்து தெரிவித்தார். அப்போது, பங்குதந்தை ரவி காட்சன் கென்னடி தலைமையில் பங்குமக்கள் வசந்தகுமார் எம்.பி.யிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணி திருத்தலத்துக்கு புனித பயணம் மேற்கொள்கிறார்கள். மேலும், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் செல்கிறார்கள். இந்த பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்ல ரெயில் வசதி இல்லை. இதனால், அவர்கள் பஸ்களில் பயணம் செய்கிறார்கள். இது அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது.

தினமும் இயக்க வேண்டும்

எனவே, தென்மாவட்ட மக்களின் நலன் கருதி கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டணம் வழியாக வேளாங்கண்ணிக்கு தினமும் மாலையில் ரெயில் இயக்க வேண்டும். இதுபோல், வரும் மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து தினமும் மாலையில் ரெயில் இயக்க வேண்டும். இதன்மூலம் வேளாங்கண்ணிக்கு செல்பவர்கள் மட்டுமின்றி நாகூர் தர்க்கா செல்பவர்களும் பயனடைவார்கள்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story