சதுர்த்தி விழா: நாகையில் , விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்


சதுர்த்தி விழா: நாகையில் , விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 6:43 PM GMT)

நாகையில் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நாகப்பட்டினம்,

நாகையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவையொட்டி விநாயகர் சிலைகள் நாகையை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறும். பின்னர் இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.

அதேபோல இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. நாகை அருகே உள்ள கோட்டைவாசல்படி பகுதியில் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக காஞ்சீபுரம், நிரவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளின் பாகங்கள் மொத்தமாக கொண்டுவரப்பட்டுள்ளன.

125 சிலைகள்

இதுகுறித்து சிலை தயாரிக்கும் தொழிலாளி ஒருவர் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெரும்பாலான சிலைகள் வடிவமைக்கப்பட்டு வர்ணம் தீட்டும் பணிகள் முடிந்து விட்டன. பல்வேறு வகையில், வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் தத்ரூபமாக செய்யப்பட்டுள்ளன.

3 அடி முதல் 10 அடிக்கு மேல் சிலைகள் தயார் நிலையில் உள்ளன. இவை ரூ.2 ஆயிரத்து 700 முதல் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது 125 சிலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் மழையில் நனையாமல் இருக்கும் விதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மாசு ஏற்படாது

இந்த சிலைகள் வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திட்டச்சேரி, நாகூர் உள்ளிட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்ய அனுப்பி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து சக்தி விநாயகர் குழு சார்பில் நாகை சவுந்தரராஜபெருமாள் கோவிலில் இருந்து சிலைகள் வரிசையாக புறப்பட்டு நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்படும்.

இந்த சிலைகள் கிழங்கு மாவு மற்றும் பார்லி அரிசி உள்ளிட்டவற்றால் செய்யப்பட்டதால் நீரில் எளிதில் கரைந்து விடும். இதனால் கடல் நீர் மாசு ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story