எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் கைது


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2019 11:00 PM GMT (Updated: 20 Aug 2019 7:37 PM GMT)

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேரை கைது செய்து இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 232 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் மகன் மணிகண்டன் (வயது 31) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், மணிகண்டன் மற்றும் அதே ஊரை சேர்ந்த சுந்தரம் மகன் பாலகிருஷ்ணன் (47), கருப்பையா மகன் கார்த்திக் (22), முனியசாமி மகன் சதீஷ் (21) ஆகிய 4 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் சென்ற படகில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் இவர்களது படகு அங்கேயே நின்றதால் மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் நடுக்கடலில் தவித்துள்ளனர்.

4 பேர் கைது

இந்த நிலையில், அந்த வழியே வந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கைது செய்தனர். மேலும் அவர்களது விசைப்படகை பறிமுதல் செய்து, கயிறு கட்டி இலங்கைக்கு இழுத்து சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story