கன்னியாகுமரியில் ரோப் கார் திட்டம் தொடர்பாக சுற்றுலா பயணிகளின் கருத்து கேட்கப்படும் தளவாய்சுந்தரம் பேச்சு


கன்னியாகுமரியில் ரோப் கார் திட்டம் தொடர்பாக சுற்றுலா பயணிகளின் கருத்து கேட்கப்படும் தளவாய்சுந்தரம் பேச்சு
x
தினத்தந்தி 20 Aug 2019 11:00 PM GMT (Updated: 20 Aug 2019 8:39 PM GMT)

கன்னியாகுமரியில் ரோப் கார் திட்டம் அமைப்பது தொடர்பாக சுற்றுலா பயணிகளின் கருத்தை அறிந்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தளவாய்சுந்தரம் கூறினார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் அண்ணா தொழிற் சங்க கொடி ஏற்று விழா நேற்று நடந்தது. விழாவுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அண்ணா அனைத்து பணியாளர் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பூம்புகார் படகுதுறை அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேஷ், துணை செயலாளர் முருகன், பொருளாளர் வனமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அழகேசன் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரோப் கார் திட்டம்

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் நீண்டகாலம் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்தும் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னியாகுமரியில் ரோப் கார் அமைக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் ஓரிரு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. ரோப் கார் திட்டம் அமல் படுத்தப்பட்டால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படகில் சென்று தான் அழகை ரசிக்க விரும்புவார்கள் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் கருத்து

எனவே இந்த திட்டத்தின் சாதக பாதகம் குறித்தும், சுற்றுலா பயணிகளின் கருத்தை அறிந்த பின்னரே இந்த ஆய்வு திட்டம் செயல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல் -அமைச்சர் கூறினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஒன்றிய துணை செயலாளர் முத்துசாமி, அகஸ்தீஸ்வரம் பேரூர் நிர்வாகி சிவபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கன்னியாகுமரி பேரூர் செயலாளர் வின்ஸ்டன் நன்றி கூறினார்.


Next Story