கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குச்சீட்டு எரிப்பு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலாளி திடீர் தற்கொலை


கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குச்சீட்டு எரிப்பு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலாளி திடீர் தற்கொலை
x
தினத்தந்தி 20 Aug 2019 11:15 PM GMT (Updated: 20 Aug 2019 8:44 PM GMT)

மார்த்தாண்டம் தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குச்சீட்டு எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலாளி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கடை,

புதுக்கடை அருகே வேடத்தான்விளை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 58). இவருடைய மனைவி வசந்தா (50). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். மகளுக்கு திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். இதனால், கணவன்-மனைவி மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.

கனகராஜ் மார்த்தாண்டத்தில் உள்ள தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். வசந்தா அப்பகுதியில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 7-5-18 அன்று மார்த்தாண்டம் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றது. அப்போது வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், வாக்குச்சீட்டு பெட்டி சங்கத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி பாதுகாக்கப்பட்டு வந்தது. மதுரை ஐகோர்ட்டு, வாக்கு எண்ணிக்கையை கடந்த ஜூலை 24-ந்தேதி நடத்த உத்தரவிட்டது.

இந்தநிலையில் ஜூலை 20-ந்தேதி நள்ளிரவு ஒரு கும்பல் தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் புகுந்து, பணியில் இருந்த காவலாளி கனகராஜை தாக்கி கட்டிபோட்டு விட்டு அலுவலகத்துக்குள் புகுந்து வாக்குச்சீட்டு பெட்டியை உடைத்து அதில் இருந்த வாக்கு சீட்டுகளை தீவைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இச்சம்பவத்தால், காவலாளி கனகராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக குழித்துறை கோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக அவர் ஆஜராகி வந்தார்.

இந்த சம்பவத்தால் மனமுடைந்த கனகராஜ் வேறு எங்கும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அதனால், வசந்தா மட்டும் தினமும் காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று மாலை வழக்கம் போல் வசந்தா வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் கனகராஜ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர், இதுபற்றி புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் மனமுடைந்த காவலாளி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story