கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Aug 2019 10:30 PM GMT (Updated: 21 Aug 2019 7:05 PM GMT)

கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெருங்குடி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 20). இவர், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அந்த கல்லூரியில் படிக்கும் மாணவியை சதாசிவம் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், இதுபற்றி அந்த மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சதாசிவம், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

*பெருங்களத்தூரில் 2 மினி லோடு வேன்களில் கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1,338 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மினி லோடு வேன் டிரைவர்களான பவுன் குமார்( 23), நூர்முகமது (22) மற்றும் பிரகாஷ் (23) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முனுசாமி (43) என்பவரை தேடி வருகின்றனர்.

*மேற்கு தாம்பரத்தில் இப்ராகிம் (45) என்பவரது செல்போன் கடையில் 4 விலை உயர்ந்த செல்போன்களை திருடிய பிரவீன் ஜோ (22), சக்திவேல் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

*மயிலாப்பூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பார்த்திபன்(28), ஆறுமுகம்(65) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

*பட்டாபிராமில் தனியார் கம்பெனி ஊழியரான ஜானகிராமன் (34) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த அஜீத்(31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

*ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட சஞ்சய் ராகுல்(19), செல்வக்குமார் ( 23) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

*பள்ளிக்கரணையில் பொதுமக்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட உதயா(21), கார்த்திக் (24), சந்திரசேகர் (28) கைது செய்யப்பட்டனர்.

*அபிராமபுரம் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட யுகேஸ்வர்(19), சிவகுமார்(22), ராமு (19) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

*துரைப்பாக்கத்தில் சதுப்பு நிலத்தில் உள்ள வீடுகளை வனத்துறையினர் கணக்கெடுக்க எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்றனர்.

*ராயபுரத்தில் ஓடும் பஸ்சில் சீனிவாசராஜ்(57) மற்றும் ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவர் அனஸ்அகமது(19) ஆகியோரை கத்தியால் வெட்டி செல்போன்களை பறித்ததாக ரவிச்சந்திரன்(20), சத்யா(23), நிரேஷ்குமார்(20), பிரவீன்குமார்(21), விக்னேஷ்(20), வடிவேல்(29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

*திருவொற்றியூரில் கருத்தடை செய்ததால் ஆத்திரத்தில் சிறுவர்கள் உள்பட 4 பேரை வெறிநாய்கள் கடித்து குதறின. இதனால் மாநகராட்சி ஊழியர்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

*உத்திரமேரூர் அருகே சொத்து தகராறில் வாலிபர் அருண்குமார்(22) கொலை செய்யப்பட்டார். இதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி வாலிபரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

*செங்குன்றம் அருகே சக்தி அம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த 1 பவுன் தாலி மற்றும் வெள்ளி பூஜை பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

Next Story