பொன்மலை ரெயில்வே ஊழியர் வீட்டில் பரபரப்பு: குளிர் சாதன பெட்டி வெடித்து தீ விபத்து


பொன்மலை ரெயில்வே ஊழியர் வீட்டில் பரபரப்பு: குளிர் சாதன பெட்டி வெடித்து தீ விபத்து
x
தினத்தந்தி 21 Aug 2019 11:00 PM GMT (Updated: 21 Aug 2019 7:37 PM GMT)

திருச்சி பொன்மலை ரெயில்வே ஊழியர் வீட்டில் நள்ளிரவு குளிர் சாதன பெட்டி வெடித்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிர் தப்பினர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி பொன்மலை ரெயில்வே குடியிருப்பு பகுதியான பழைய டீசல் காலனியை சேர்ந்தவர் பாரதி (வயது 47). ரெயில்வே ஊழியரான இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது மகள், மருமகன் மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த குளிர் சாதன பெட்டி (பிரிட்ஜ்) திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து வீட்டில் தீப்பிடித்தது. இதனால், அலறியடித்து எழுந்த பாரதி, பேரக்குழந்தைகள் உள்பட 4 பேரையும் பத்திரமாக வெளியே அழைத்து வந்து விட்டார். இதனால், அவர்கள் அனைவரும் உயிர் தப்பினர்.

பின்னர், திருச்சி தீயணைப்பு நிலையத்துக்கு பாரதி தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒருசில பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன.

இந்த தீ விபத்து குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story