நொய்யல் ஆற்றை தூர்வாரி பாதுகாக்க வேண்டும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை


நொய்யல் ஆற்றை தூர்வாரி பாதுகாக்க வேண்டும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Aug 2019 11:15 PM GMT (Updated: 21 Aug 2019 9:03 PM GMT)

நொய்யல் ஆற்றை தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

கோவை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மற்றும் ஈரோட்டில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபின், சென்னை செல்வதற்காக நேற்று மாலை கோவை விமானநிலையத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, கந்தசாமி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, ஆவின் சேர்மன் கே.பி.ராஜு, தோப்பு அசோகன், வெள்ளலூர் பாலகிருஷ்ணன் மற்றும் கட்சி பிரமுகர்கள், கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத், ஐ.ஜி. பெரியய்யா மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் மாலை 5.25 மணியளவில் விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி சென்னை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள், கோவை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நீர் ஆதாரமாக விளங்கும் நொய்யல் ஆறு, மொத்தம் 147 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. நொய்யல் ஆற்றில் முள்புதர்கள் வளர்ந்துள்ளதால் தண்ணீர் சீராக செல்லவில்லை. மேலும் நொய்யல் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், தூர்வாரியும் கரைகளை பலப்படுத்த முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நொய்யல் ஆற்றில் நகர மற்றும் ஊராட்சி கழிவு, தொழிற்சாலை கழிவுகள், சாயப்பட்டறை ரசாயன கழிவுகள் கலப்பதால் மாசுபடுகிறது. சுகாதார கேடும் ஏற்படுகிறது. நீர் நிலைகளை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்-அமைச்சர் தனி அதிகாரியை நியமித்து பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை மூலமாக நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நொய்யல் ஆற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார்.

Next Story