வேதாரண்யம் அருகே சாமி சிலைகளை கொள்ளையடித்த 3 பேர் கைது


வேதாரண்யம் அருகே சாமி சிலைகளை கொள்ளையடித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2019 11:15 PM GMT (Updated: 22 Aug 2019 6:57 PM GMT)

வேதாரண்யம் அருகே சாமி சிலைகளை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் உள்ள பழமையான கோடிமுத்து மாரியம்மன் கோவிலில் கடந்த 14-ந்தேதி இரவு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மறுநாள் காலையில் பார்த்த போது கோவிலில் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஐம்பொன்னால் செய்யப்பட்ட அம்மன் சிலையும், உலோகத்தால் செய்யப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானை சிலைகளும் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ், சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருக்குவளை, ராமன்கோட்டகம், ஏர்வாக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வள்ளி, தெய்வானை ஆகிய சாமி சிலைகளை மீட்டனர்.

3 பேர் கைது

இதுதொடர்பாக வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர், பென்னாங்காட்டை சேர்ந்த லோகேஸ்வரன் (வயது20), உதயராஜன் (30), வேளாங்கண்னி அருகே சின்னதும்பூரை சேர்ந்த சதாசிவம்(30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிலை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருக்குவளையில் மீட்கப்பட்ட வள்ளி, தெய்வானை அம்மன் சிலைகள் வேதாரண்யம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. மேலும், கொள்ளைபோன மாரியம்மன், முருகன் சிலைகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story