செந்துறை அருகே 4 கோவில்களின் பூட்டை உடைத்து குத்துவிளக்குகள்-பணம் கொள்ளை


செந்துறை அருகே 4 கோவில்களின் பூட்டை உடைத்து குத்துவிளக்குகள்-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 22 Aug 2019 11:15 PM GMT (Updated: 22 Aug 2019 7:36 PM GMT)

செந்துறை அருகே உள்ள 4 கோவில்களின் பூட்டை உடைத்து குத்துவிளக்குகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கீழராயம்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற நல்லப்பா கோவில். இந்த கோவிலை தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் திங்கட்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த திங்கட்கிழமை இந்த கோவில் திருவிழா நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும், கோவிலில் இருந்த 16 செம்பு குத்துவிளக்குகளையும் கொள்ளையடித்தனர். மேலும் அருகில் உள்ள மற்றொரு நல்லப்பா கோவிலின் பூட்டை உடைத்து கோவிலில் இருந்த 23 செம்பு குத்து விளக்குகளையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளைபோன குத்துவிளக்குகளின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை

தொடர்ந்து அரியலூரில் இருந்து மோப்பநாய் மலர் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு, உஞ்சினி சாலையில் சிறிது தூரத்திற்கு ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து கோவில் நிர்வாகி நல்லதம்பி கொடுத்த புகாரின் பேரில், இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நல்லப்பா கோவில்களில் ஆண்டுதோறும் திருவிழா முடிந்த பின்னர் கொள்ளை சம்பவம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்பு

இதேபோல் மருதூர் பெரியசாமி கோவில், ராயம்புரம் மேற்கு தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் ஆகியவற்றின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் கோவில்களில் இருந்த உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும் செந்துறை கடைவீதியில் உள்ள ஒரு உரக்கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.500-ஐ எடுத்துச் சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக செந்துறை போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரேநாளில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவங்களால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story