கந்தர்வகோட்டை அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு


கந்தர்வகோட்டை அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2019 10:15 PM GMT (Updated: 22 Aug 2019 8:12 PM GMT)

கந்தர்வகோட்டை அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி மலர்கொடி (38). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கந்தர்வகோட்டைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்துள்ளனர். வளவம்பட்டி விளக்குரோடு அருகே வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்களில், பின்னால் இருந்தவர், மலர்கொடி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த மலர்கொடியும், செந்தில்குமாரும் சுதாரிப்பதற்குள், மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர்.

வலைவீச்சு

இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன்-மனைவி 2 பேரும் கீழே விழுந்தனர். 2 பேரும் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டனர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் மர்ம நபர்களை விரட்டி சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் செந்தில்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story